கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டங்கள் இஸ்ரேலில் துரித கதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் ஹமாஸ் ஆட்சி செய்யும் காசா பகுதிகளிகளில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் தடுப்பூசி வழங்கப்படாமல் புறக்கணிப்படுவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிடப்பட்டே கொரோனா தடுப்பூசித் திட்டங்களில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி பாலஸ்தீன மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இஸ்ரேல் தனது 9 மில்லியன் மக்கள் தொகையில் 10 வீதமானவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது. எனினும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு மேற்குக் கரை, காசா பகுதிகளை புறக்கணித்துள்ளது.
பைசர் / பயோஎன்டெக் தடுப்பூசிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் கூட அங்குள்ள 2.7 மில்லின் பாலஸ்தீன பூா்வீக குடிமக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு யூதக் குடியேற்றவாசிகள் மட்டுமே தோ்தெடுக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை கொண்டுள்ள பாலஸ்தீனிய ஆணையம் (PA) தடுப்பூசிகள் விநியோகம் தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு இந்தப் புறக்கணிப்பு தொடர்கிறது.
பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த 2020 ஆம் ஆண்டின் முற்பகுதி முதல் இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார்.
இதனைக் காரணியாகக் கொண்டு தொற்று நோயின் கடுமையான நெருக்கடி காலகட்டத்தில் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் புறக்கணித்து வருகிறது என மனித உரிமை ஆா்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் கோவாக்ஸ் எனப்படும் உலக சுகாதார அமைப்பின் பொதுத் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்களுக்கான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
எனினும் இவ்வாண்டு நடுப்பகுதியிலேயே கோவாக்ஸ் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரலாம் எனக் கணிக்கப்படுகிறது.
இதற்கிடையில், யூதர்களுக்குமுழுமையாகத் தடுப்பூசி போட்ட பின்னர் இருக்கும் உபரி தடுப்பூசிகளை பாலஸ்தீனியர்களுக்கு வழங்க இஸ்ரேலிய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதி பாலஸ்தீன மக்களின் உரிமைகளை இவ்வாறு வெளிப்படையாகவே இஸ்ரேல் மறுத்துவருவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் விமர்சித்துள்ளன.
தொற்று நோய்கள் மற்றும் நெருக்கடிகளின்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆக்கிரமிப்பாளர்களின் கடமை என ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தின் 56 வது பிரிவு வலியுறுத்துகிறது. எனினும் இதனை இஸ்ரேல் வெளிப்படையாகவே மீறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சாடுகின்றனர்.
இன ரீதியான இஸ்ரேலின் இத்தகைய புறக்கணிப்பு தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு மாறாக அதன் அதிகரித்த பரவலுக்கே வழிவகுக்கும் எனவும் அவா்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்